SRI JAYA VEERA ANJANEAYAR TEMPLE


  ஸ்ரீ ராமதாசன் என அன்போடு வணங்கப்படும் ,ஸ்ரீ அனுமன் எழுந்தருளி இருக்கும் கருவறை தோற்றம்.
                                                                                
         சுந்தரகாண்டத்தில்  அனுமனின்  சிறப்பு 

      நாம்  எப்போதாவது வாழ்க்கையில் தோல்வியில், சரிவில்  இருந்திருப்போம், மிகவும் சிரமப்பட்டிருப்போம். முற்றிலுமாக நம்பிக்கையை இழந்திருப்போம். இதை அறிந்தால்  பெரியவர்கள் கூறும் அறிவுரை ‘சுந்தர காண்டம் படி, பராயணம் செய், கஷ்டத்திலிருந்து மீண்டு விடுவாய்’ என்பதுதான்.  சுந்தர காண்டம் பாராயணம் நமக்கு எப்படி நன்மை புரியும்?  இதில் அப்படி நமக்கு புரியாத ஒரு விளக்கம் உள்ளதா? 
                அவதார புருஷன் ராமனின் கதை நாம் எல்லோரும் அறிந்ததுதான். மனிதனாக பிறந்து கடமை, வீரம், காதல், ஒழுக்கம் என பல நல்ல குணங்களுக்கு உதாரணமாக வாழ்ந்து, மனிதனுக்கு வரக்கூடிய எல்லா சிரமங்களையும்   அனுபவித்த ராமபிரானின் கதை. லட்சுமணன், சீதப் பிராட்டி, அனுமன் என உத்தம புருஷர்களின் கதை. கம்பர்  எழுதிய காவியம். ராமன் பிறந்தது முதல் ராவணனுடன் போர் புரிந்து சீதாப் பிராட்டியாரை மீட்டு அயோத்தி நகருக்கு திரும்பும் வரை ஏழு பாகமாக பிரித்து எழுதப்பட்ட கதை ராம கதை. இதில் மிகவும் சிறப்பானதாக கருதப்படுவது சுந்தர காண்டம். ஏனிந்த சிறப்பு?
ராம கதையின் நாயகன் ராமன் என்றால்,  சுந்தர காண்டத்தின் நாயகன் அனுமன்தான். சுந்தர காண்டத்தின் ஆரம்பத்தில் ராமனின் நிலை என்ன? அன்பு மனைவி சீதையை ராவணன் அபகரித்து விட்டான். சீதை இருக்குமிடம் தெரியவில்லை. தனது விதியை நினைத்து கலங்கி, புலம்பி திரிகிறான். வானர சேனைகளின் உதவி கிட்டியுள்ளது. அனுமன் எனும் வீரனிடம் தனது கணையாழியை கொடுத்து சீதையை கண்டால் காட்டும்படி கொடுத்துள்ளார். சீதை என்ன கஷ்டப் படுகிறாளோ, என்ன தீங்கு விளைந்ததோ, உயிருடன் தான் இருக்கிறாளா?  இல்லையா?  என விடை தெரியாத குழப்பநிலை, 
   சீதையை தேடும் அனுமன் கலக்கம், வருத்தம், வெற்றி கிட்டாதோ? எனும் பயம், பிரம்ம அஸ்திரத்தால் கட்டுண்டு  பல கஷ்டங்களை எதிர் கொள்கிறார். ராவணனின் பலத்தையும், இலங்கையின் செல்வ செழிப்பையும் கண்டு மிரள்கிறார். தன்னை தானே தேற்றிக் கொண்டு கொஞ்சம், கொஞ்சமாக நம்பிக்கை பெறுகிறார். சீதையை காணுதல், சீதையின் அன்பை பெறுதல், சீதை கணையாழி பெற்றுக் கொண்டது, இலங்கையை எரித்தல், அரக்கர் படைகளை அழித்தல், ராவணனின் கர்வத்தை ஒடுக்குதல் என பல வெற்றிகளை அடைகிறார். சீதை இருக்கும்  நற்செய்தியையும், கணையாழியையும் ராமனுக்கு கொடுப்பதுடன் அனுமனின் சாகசங்கள் மிகுந்த சுந்தர காண்டம் நிறைவு பெறுகிறது.
 இதில் முற்றிலும் நம்பிக்கை இழந்த ராமபிரானுக்கு மீண்டும் நம்பிக்கை ஊட்டும் கதைப பகுதி சுந்தர காண்டம். வீரனாயிருந்தாலும், மனக் கலக்கங்களை அனுபவித்து, மீண்டு வர போராடிய  ராமபிரானுக்கு நல்ல செய்தியும் நம்பிக்கையும் கொடுத்த அனுமனின் புகழ் பாடும் கதை சுந்தர காண்டம்.
சுந்தர காண்டம் நம்பிக்கை கொடுக்கும் கதை. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவை விலகும் எனும் பொறுமை போதிக்கும் கதை. அனுமனை போல் ஒரு நல்ல வழி காட்டி  கிடைப்பவர், வாழ்வில் ஒளி பிறக்கும் எனும் நம்பிக்கை கொடுக்கும் கதை.
எனவே அனுமனின் அருளும், வழிகாட்டுதலும் கிடைக்க ''சுந்தர காண்டம்'' பாராயணம் செய்து  வாழ்க்கையில் அதிசயிக்க வைக்கும் மாற்றமும், முன்னேற்றமும் அடைவோம் .

கருத்துகள் இல்லை: